Sunday, April 3, 2016

அறிவு மயக்கம் அகற்றும் அறிவியக்கம்


அறிவு மயக்கம் அகற்றும் அறிவியக்கம்

(நம்நாடு வார ஏட்டில் 12.02.1976 ல் நந்திவர்மன் எழுதியது)

பஞ்சாங்கம் பார்த்துப் பாழ்பட்டுப்போன நாட்டில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கடிகார முள்ளோடு போட்டியிட்டுக் காரியமாற்றியோர் நிரம்பிய மேலைநாடுகள் பொருளாராரத் துறையில் பெரு வெற்றி ஈட்டியதைக் கண்ட பின்னரும், கருத்திலே தெளிவு ஏற்படாமல் காரிருளில் சிக்கிக் கிடக்கின்றோம். கோளின் அசைவே கொணர்க உணவென வாளா இருந்தால் வயிறது தூற்றும். நேரம் சரியாகும்வரை ஏதுஞ் செய்யேன் என்று படுத்துக் கொண்டால் அடுக்கடுக்காய் அல்லல்கள் வரும். கைவரி கண்டு காசு பறிக்க எவனோ சொல்லும் பொய்யுரை நம்பிப் பொழுதெல்லாம் தூங்கிக் கிடந்தால் வறுமையை விரட்டுவதும் வளமையைத் திரட்டுவதும் முடியாமற் போகும். கடவுளுக்கு விழாவெடுத்துக் காசைக் கரியாக்கிக் கொண்டிருந்தால் இடைத்தரகர் ஏப்பம்விட ஏதுவாகுமே ஒழிய எல்லா நலனும் வந்துவிடாது.
அயனோத்சவத்தால் புண்ணிய பலம் அடையலாமென்பது அறிவிலார் மட்டுமே நம்புதற்கேற்றது. பாதோத்சவத்தால் இராஜதோஷ நிவர்த்தி ஏற்படும் என்றும். அமாவாசையால் தாரபுத்திராதி இஷ்டகாமிய சித்தி அடையலாம் என்றும் பௌர்ணமி பூசையால் சகல பாப நிவாரணம் எய்தலாம் என்னும் பௌர்ணமி பூசையால் சகல பாப நிவாரணம் எய்தலாம் என்றும் கிருத்திகை கொண்டாடுவரால் சௌக்கியம் விளையும் என்றும், திருவாதிரையால் சகல சம்பத்தும் சேரும் என்றும். மகம் கொண்டாடினால் சுஜன சிரேஸ்டத் துவம் ஏற்படும் என்றும். உத்திரத்தால் சீலம் நேரும் என்றும். சித்திரையால் ரூபலாவண்ய மனைவி கிடைப்பாள் என்றும் ஆரியர் இட்டுக் கட்டிய கட்டுக் கதைகளை இன்னமும் நம்பிக் கொண்டிருக்கலாமா? சித்திரை கொண்டாடாத சீர்திருத்தக்காரர்க்கு அழகிய மனைவி அகப்படாமல்தான் போய்விட்டாளா? சித்திரை கொண்டாடும் பக்திமான்கட்கு அகோர பத்தினியர் இல்லாமலா
இருக்கின்றனர் என்றெல்லாம் எண்ணத்திலே கேள்விக்குறிகளை எழுப்ப பகுத்தறிவியக்கமாம் தி.மு. கழகம் இங்கு இல்லையானால் மடமைப்பிடியில் மாக்களென இன்னமும் தான் நம்மவர் உழன்று கொண்டிருக்க நேரும்.
கைராட்டை சுற்றிக் கொண்டும், கலப்பûயால் உழுது கொண்டும், கட்டை வண்டியிலே பயணஞ்செய்து கொண்டும் இராகுகாலம்-எமகண்டம், வாரசூலை என நாளின் பெரும்பகுதியை வீணாக்கிக்கொண்டும், சும்மா இருப்பதே சுகம் என முழங்கிக்கொண்டும், திண்ணைப் பேச்சிலும் தெருமுனைப் பேச்சிலும். சந்துமுனைச் சிந்திலும் காலத்தைக் கழித்துக் கொண்டும் உலகில் நிரந்தரப் பிச்சைக்காரர்களாய் நம் நாட்டவர் என்றென்றும் இருக்குமளவு மதங்கள் ஊட்டிய ஆரியமாயையில் இருந்து தமிழினத்தை விடுவிக்கும் பெரும் பொறுப்பு தி.மு. கழகத்தின்மீது விழுந்துள்ளது.
கருட வாகனத்தையும், மயில் வாகனத்தையும், பெருச்சாளி வாகனத்தையும், ரிஷ்ப வாகனத்தையும் வெள்ளியாலும் பொன்னாலுஞ் செய்து óவறுமையிலே கடைசிவரை நெளியத்தான் óகற்றுக் கொண்டிருக்கிறோமே ஒழிய, விண்வெளியுகத்திற்கு வேண்டிய அறிவைப்ó பெறத் தவறிவிட்டோம்.
"கருடன், கழுகு, மயில், திருடும் நாய், பெருச்சாளி, கடிக்கும் பாம்பு, குரங்கு, பிடிக்குங்குதிரை, யானை, குருடுகளே! மாடுளையும் அதன் சாணியையும் பெண் குறியையும் தெய்வமென்று வெறி கொண்டலையாதேயும் " என்றும்.
"வில்வந் துளசி கொன்றை கொல்லும் அவரி ஆத்திவேம்போ டரசுவன்னி, ஒம்பால் பனையறுகம் புல் ஒதிதருப்பை யாவும் நல்கும் கதியென்றெண்ணி பொருளைக் காணமற் போனீர்-இருளின் மக்களே நீங்கள் " என்றும் சித்தர்கள் பாடி அறிவுறுத்தும் நிலை ஏன் ஏற்பட்டது என இன்னமும் எண்ணிப் பார்க்காதிருக்கிறோம். சித்தர்கள் வழியில் சீர்திருத்த இயக்கமாம் தி.மு. கழகம் எழுப்பிய வினக்குறிகள் தொடர்ந்து தமிழன் ஒவ்வொருவனுடைய நெஞ்சிலும் ஒங்கி ஒலித்தாக வேண்டும். விஞ்ஞானச் சித்தனை வேரூன்றி வளர்ந்தாக வேண்டும். பகுத்தறிவு ஒளி பாய்ந்தாகல் வேண்டும்.
"செஞ்ஞாயிற்றுச் செலவு " பற்றிய புறப்பாடல் தமிழனிடம் உண்டு. ஆயின் இடையில் தமிழனுக்கு ஏற்பட்ட மதி மயக்கம் பாடல் வழியில் ஞாயிறு ஏகும் பயணத்திற்கான விஞ்ஞான அறிவை வளர்த்துக் கொள்ளவிடாமல் தடுத்துவிட்டது. அறிவியல் முனைப்பையும் முன்னேற்றத்தையும் அடியோடு கெடுத்து விட்டது. வறுமையை பரிசாகக் கொடுத்துவிட்டது. ஊக்கத்தை வேரோடு ஒழித்துவிட்டது. உழைக்கும் துடிப்பை மூடநம்பிக்கையும் புராண போதையும் அழித்துவிட்டது.
அணுவைத் துளைத்து என்ற திருவள்ளுவமாலை வரி இங்கே உண்டு. அணுவைப் பிளக்கும் ஆற்றலை நாம் பெற்றோமில்லை. திருவள்ளுமாலை வரியில் கற்றோமில்லை.
பழந்தமிழ் மன்னர்களும் பொறியியல் வளர்ச்சிக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தே வந்தள்ளனர்.
மன்னர் தம் கோட்டை மதில் மீது நூற்றுவரைக் கொல்லி, நூக்கியெறி பேய்ப்பொறி களிறுப்பொறி. பாம்பும் பொறி சங்கிலிப்பொறி புலிப்பொறி. விற்பொறி, குதிரைப் பொறி, தொடர்வாள். கற்பொறி, தீப்பொறி, நெருக்கு மரம்.கெம்புருகு, வெம்புருகு,நெய் உமிழும் பொறி, அம்புமிழும் பொறி, கல்லுமிழும் பொறி, குரங்குப்பொறி, அரியும் பொறி, நண்நூல் என்று பகைவரைத் தாக்கும் பன்னூறு பொறிகள் இருந்தகை சீவக சிந்தாமணி செப்புகின்றது. இன்று போர்க்கருவிகளை பிற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யக் கற்றுள்ளோம் என்பதைத் தவிரப் புதுவதுபுனையும் ஆற்றல் அற்றுவிட்டோம் என்பதுதானே வெள்ளிடைமலை.
இத்தகு பொறிகளே இல்லாமல் கையும் காலுமே கருவிகள் என மனிதர்கள் அடித்துக்கொண்டிருக்கலாம். கற்கருவி, இரும்புக் கருவி என மாந்த நாகரிகம் மெள்ள மெள்ள வளர்ந்திருக்க வேண்டிய அவசியமே இல்லை என்போர் அவனியில் இருந்திடக் காண்போமோ?
விண்வெளி யுகத்தில் கட்டை வண்டி வேகத்தில் காரியம் நடைபெற்றாக வேண்டும் என வாதிடும் விந்தை மனிதர்களும் இருக்கின்றரே என்ற வேதனைதான் வெடித்துக்கிளம்புகின்றது.
ஒலி வேகத்தில்-ஒளி வேகத்தில் உலகில் அறிவியல் வளர்ச்சி ஏற்படும் காலத்தில் நாம் வாழ்கின்றேம்.
ஒலி வேகம் வேண்டும் என உணர்த்த ஒலியை ஒம் வடிவில் வழிபட்ட பரம்பரையினர் நாம் நாம் எனினும் ஆமைகளாய் ஊமைகளாய் ஆற்றலற்றுக் கிடக்கின்றோம்.
ஒளி வணக்கம் - உதயசூரியன் வழிபாடு உலகெல்லாம் பண்டு தொட்டு இருந்து வருகின்றது. ஒளிக்கு உருவம் தந்து-தீயை உண்டாக்குகின்ற தீக்கடைக் கோலை "சிவலிங்க " மென வணங்கி வருகின்றோம். தீக் கடைக்கோல் அன்று தீ மூட்டத் தேவையாயிற்று. அதனை அந்நாளில் தெய்வம் ஆக்கிவிட்டனர். பின்னால் சக்கிமுக்கிக்கல் தீயை உண்டாக்கினலும் அதனைக் கும்பிடு வாரில்லை. இன்று தீப்பொறியை உண்டாக்குவதால் குச்சியை தெய்வமெனக் கும்ப்பிடுவோமா? ஒரு பொத்தானை அமுக்கினாலே அறைமின் ஒளி பரவுகின்றது - கண்டு கன்னத்தில் போட்டுக்கொள்கிறேமே ஒழிய பொத்தனையோ-மின்விளக்கையோ வழிபடத் தலைப்படுவதில்லை.
ஒளி வணக்கம் உருவ வணக்கமாகி "நட்டகல்லை தெய்வ மேன்று " சிவவாக்கியர் என்னும் சித்தர் செப்புவதுபோல நாலுபுட்பம் சாத்தும் மடமை நாட்டினில் பெருகிவிட்டது உருவணக்கத்தை ஒழித்து ஒளி வணக்கத்தினை உயிர்ப்பிக்க கித்தர்களும் வள்ளலாரு முயற்சி செய்யும் அளவு தீமை புரையோடி விட்டது. ஒளி வேகத்தில் விண்ணில் பயணம் செய்யும் கலங்களைப் படைத்திடும் மேனட்டார் ஒளியை வழிபட்டுக் கொண்டிருந்தாரில்ல இந்த உண்மையை பசுமரத் தாணிபோல் தமிழன் ஒவ்வொருவனுடைய உள்ளத்திலும் பதித்துப்பகுத்தறிவு யுகம் உதிக்கும் வரையில் தி.மு. கழகத்தின் தொண்டு நம் நாட்டுக்குத் தேவைப்படுகின்றது.
வழிபாடு நம் அறிவியல் வளர்ச்சியைக் கெடுத்துவிட்டதும் ஆலயம் தொழுதல் சால நன்றென்று கோயில் கட்டிக்குடமுழுக்காட்டிக் கொண்டிருந்தோமே ஒழிய அறிவியல் துறையில் முன்னேற்றத்தைக் காணத் தவறிவிட்டோம். இத்தோடு முன்னோர் அறிந்தவர்களையும் மூடிவைத்து பாழாய் போய்விட்டது.
கண்டவர் விண்டிலர் என்று கணக்கில்லா அறிவுத்துறை செய்திகள் கல்லறைக்கும் போய்விட்டன. சித்த மருத்துவச் சிறப்பு இன்று பெருமையாகப் பேசப்படுகின்றது. எத்தனை சித்த மருத்துவச் செய்திகள் ஒரு சிலரின் தன்னலத்தால் பிறங்கடைகட்குக் கிட்டாமல் எட்டாமல் போய்விட்டது சிலரிடம் சிறைப்பட்டிருந்த அறிவுதான் இப்படிப் பயன் படாமல் போயிற்றென்றால்ல் செல்லரித்த சுவடிகளில் அழிந்துவிட்ட அற்புத மருத்துவத்திற்கு அளவேது.
உள்ள அறிவையே ஒழுங்காகப் பயன்படுத்திக் கொள்ளததால் தவறிவிட்ட நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
‘நித்திய கல்யாணி’ எனும் மூலிகை இன்று புற்றுக் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப் பயன்படுகின்றது. வேர்கள் மூலிகைகள் பற்றி ஆழ்ந்தகன்ற அறிவுசான்ற பழந்தமிழ்ச் சித்தர்க்கு இது தெரியாத சேதியாக இருந்திருக்கமுடியாது. ஆயின் அழிந்து போன ஏடுகளில் அடுத்துவர்க்கு அறிவிக்கப்படாது அழிந்த கருத்துக்களில் இதுவும் அடங்கி இருக்கலாம்.
இன்றோ, மருத்துவச் சொற்கள் தமிழில் இன்னமும் மொழியப் பெயர்க்கப் படாமல் மருத்துவம் ஆங்கிலத்தின் வாயிலாகக் கற்பிக்கப்படுகின்றது. தமிழ் இத்துறையில் பயிற்று மொழியாவது தி.மு. கழகம் மறுபடியும். அரசுப் பொறுப்பேற்றால் தான் இயலும்.
புதுவை ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மாணவராக இருந்தபோதே டாக்டர் அரிமா மகிழ்கோ என்ற இளைஞர் உடற்கூறியலைத் தனித் தமிழில் மொழி பெயர்த்தார். இன்னமும் இது வெளியாகவில்லை. தூய தமிழில் மருத்துவச் சொற்களைப் படைக்கும் இவர் போல்வார்தொண்டைத் தமிழ்ப் பற்றுடைய தி.மு. கழக அரசே பயன்படுத்த முடியுமே அல்லாமல் இனப்பகைவர் எம்.ஜி. ஆரிடம் இதனை எதிர்பார்ப்பதால் பயனில்லை.
மேலைநாட்டவர் குற்றவாளிகளை ஒருவகை நோயாளிகள் என்று கொண்டு சில நரம்புகளை மருத்துவம் அல்லது அறுவைப் பண்டுவம் மூலம் திருத்தினால் கொலை, களவு போன்ற குற்றங்களே நிகழாமல் தடுத்திடலாம் என்கிறனர், ஒபன் ஈமர், எட்வர்டு டெல்லர் போன்ற அறிஞர்தம் கருத்தை பேரறிஞர் அண்ணா மனிதனும் மிருகமும் என்ற கட்டுரையில் மேற்சொன்ன தகவலைத் தெரிவிக்கின்றார்.
எழுபத்தீராயிரம் நாடிகளும் பதின்மூன்றாயிரம் நரம்புகளும் மனித உடலில் உள்ளன எனவும், நாழிகை ஒன்றுக்கு 360 சுவாசமாக நாளொன்றுக்கு இருபத்தோராயிரத்து அறுநூறு முறை சுவாசிக்கிறோம் என்றும் திருமூலர் கணக்கிடுகிறார், இந்த அறிவு இதற்குப் பின்னால் ஆய்வைத் தூண்டப்பயன்பட்டிருந்தால் ஈரர்யிரம் ஆண்டுகளில் இங்கேயே மேலே நாட்டில் இன்று முளைவிடும் சிந்தனை என்றோ முளைவிட்டிருக்க முடியும். சில நூல்களை தொடத் தவறினோம் தொட்ட நூலில் அறிவிக்கப் பட்ட செய்திகளை விட்ட இடத்தினின்று தொடரத் தவறினோம். இன்று இடறுகின்றோம். கராத்தே போர் முறைக்கே வித்தே தமிழகத்தில் இருந்து தான் கிடைத்துள்ளது. பழந் தமிழகத்தில் வர்மக்கலை என்றோர் போர்முறை உண்டு இதில் வல்லமை பெற்றதினாலேயே சில அரசர்க்கு வர்மன் என்ற அடைமொழி ஏற்ப்பட்டது. இந்தக் கலை கற்பவரின்றி கற்பிப்பாரின்றி தமிழகத்தில் அடியோடு அழிந்து விட்டது.
வர்மக்கலையை அறிந்தவர் இன்று மலேசியாவில் வாழும் மாமுனிவர் இராமதாசர். கூரியர் ஆசிரியர் மணவை முசுதபா போன்றோர் இராமதாசரிடம் இருந்து இக்கலை பற்றிய நுட்பங்களைக் கேட்டறிந்து நாட்டுக்கு அறிவிக்கும் நினைவுடன் இருந்து வருகின்றனர். எதிர்காலத்தில் ஏற்பட உள்ள தி.மு.கழக அரசு இக்கலையைப் பேண ஆக்கமும் ஊக்கமும் நல்கும்.
அழிந்துவரும் கலைகளை அழியாமல் காப்பதற்கும் அறிவியல் வளர்ச்சியை விளக்கவும் அறிவியக்கமாம் தி.மு.கழகத்தின் பணி நம் நாட்டிற்கு என்றென்றும் தேவையாய் உள்ளது.
நிலந்தரு திருவே பெரிதென்றால்கூடப் பொறியியல் அறிவு பயன்பட்டு இயந்திரங்கள் வேளாண்மையில் இறங்கிப் புதிய முறைகள் செயல்படுத்தப்பட்டால்தான் பசிப் பிணியை ஓட்ட முடியும். சோவியத் விஞ்ஞானியர் மனிதனுடைய மூவேளை உணவையும் மாத்திரை வடிவில் ஒரு தீப்பெட்டியில் அடைக்க முடியும் என்றோர் ஆராய்ச்சி மூலம் நிறுவியுள்ளனர். இவ்வராய்ச்சியின் பயன் மக்களை அடையும் போதுதான் பசிப்பிணிகயை வெற்றி கொள்ள முடியும். பொறியியல் வளர்ச்சி அறிவியல் எழுச்சி இன்பத் தமிழகத்தில் ஏற்பட எண்ண விளக்கேற்றவல்ல இலட்சியப் பாசறை தி.மு.கழகமே.
பொறிகளாலே உழைப்பினையே புவிமாந்தர் பெற்றிட்டால் பூமியிலே இருவர்க்கப் பூசல் இல்லாதொழியும். பற்றாக் குறை இல்லாமல் பல்பொருட்கள் பல்கிவிட்டால் பகிர்ந்திடுவதில் பாகுபாடு பாரினில் இருந்திடாது. முற்றுரிமை பெற்றுலகில் முன்னேற்றம் காண்பதற்கு முனைப்போடு உழைப்பவரின் முக மலர்ச்சி தோன்றுவதற்கு வெற்றொலியும் விரக்தி வேதாந்தங்களும் வெட்டிப் பேச்சும் தடையாகும். வெட்டிப் பேச்சைத் தட்டி நடக்கும் வீரம் என கழகம் தோன்றிய முப்பதாம் நாளன்று எழுதிய கட்டுரையில் பேரறிஞர் அண்ணா எழுதுவாரே அந்த வீரத்தைப் பெற்ற மறவர்தம் பாடிவீடாம் தி.மு.கழகமே, விஞ்ஞான வழிச் சிந்தனையை வேரூன்ற வல்லது. அறிவெழுச்சி ஊட்ட வல்லது. அறியாமையை ஓட்டவல்லது.
அகமகிழ முக மலர அவனியுள்ளோர் ஒன்றாகி ஒருலகம் என்றாகி இருவர்க்கம் அற்றொழிய எல்லாரும் எல்லாமும் பெற்றுயர மடமை தொலைய மதவிருள் கலைய பகுத்தறிவொளி பரவ பழந்தமிழர் பண்பும் கலைகளும் சிறந்தொளிர தி.மு.கழகம் ஆற்ற கொண்டிய பணிகட்காகவே நாடும் வீடும் நாளும் கழகத்தை கலைஞரை ஏற்றிப் போற்றிக் கொண்டிருக்கும்.


No comments:

AIADMK spent Rs 641 crore in 2016 to bribe its way back to power Documents reveal that AIADMK spent Rs 641 cr in 2016 to bribe its ...