Wednesday, November 21, 2007

Under Sea Exploration of Lost Tamil Lands

குமரிக் கண்ட உண்மையை உலகம் அறியக் கடலடியில்தொல்லியல் ஆய்வுகள் தேவை (நா. நந்திவர்மன், பொதுச்செயலர், திராவிடப்பேரவை)

ஈராயிரமாண்டுப் பழமை பற்றிய பெருமிதம் சொற்பொழிவாற்றும் தமிழறிஞர்கள் உரையின் உள்ளீடாகத் திகழும். அடிக்கடி நாம் பயன்படுத்தும் இச்சொற்றொடரில் மாற்றத்தை ஏற்படுத்தியவர் கிரகாம் அன்காக் (Graham Hancock). பூம்புகார்க் கடலடியில் ஆய்வு செய்தவர். அரிய சான்றுகளை வெளிக்கொணர்ந்தவர். அந்தத் துறைமுக நகரம் 9500 ஆண்டு முந்திய சிறப்புக்குரியது என்று தினமணி நாளேட்டின் வழி அவர் கூறி இருந்தார். அவர் அண்மையில் வெளியிட்ட நூல் தமிழர்கள் படித்தறிய வேண்டிய அரிய நூலாகும். Under world: The Mysterious Origins of Civilization என்ற 760 பக்கமும் 27.50 டாலர் விலையும் கொண்ட இந்நூல் 2002 இல் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது.
அந்நூல் எழுத அவருக்குச் சான்றாகக் கிட்டியவை டர்காம் பல்கலைக் கழகப் பேராசிரியர் கிளென் மல்னி உருவாக்கிய கடற்கோள்களால் மூழ்கடிக் கப்பட்ட நாடுகள் பற்றிய வரைபடங்களாகும். இன்றைக்குச் சற்றேறக்குறைய 17.000 ஆண்டுக்கும் 8000 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலக்கட்டத்தில் மூன்று கடற்கோள்கள் பல நாகரிகங்களை, நாடுகளை மூழ்கடித்து அழித்து விட்டதை அந்த வரைபடங்கள்வழி அவர் விளக்கியுள்ளார்.
உலக நிலப்பரப்பில் ஐந்திலொரு பங்கு நீரில் மூழ்கியது. 25 மில்லியன் சதுரக் கிலோமீட்டர் நிலப்பரப்பைக் கடல் விழுங்கியது. இந்த வரைபடங்கள் நூற்றுக்கு நூறு சரியானவை அல்ல. எனினும் கடல்கோள்கள் உலகமும் தமிழரும் இழந்த நிலப்பரப்பை உய்த்துணர உதவக் கூடியவை.
15ஆயிரமாண்டுக்கும், 14ஆயிரமாண்டுக்கும் இடையேயும், 12,000 ஆண்டுக்கும், 11,000ஆண்டுக்கும் இடையேயும், 8000ஆண்டுக்கும் 7000 ஆண்டுக்கும் இடையேயும் மூன்று கடல் கோள்களும் நில அமிழ்வும் நடந்துள்ளன என அறிஞர் பலர் கருதுகின்றனர். இதில் இரண்டாம் கடல் கோள் நிகழ்ந்த 12 ஆயிரமாண்டுக்கும் 11,000 ஆண்டுக்கும் இடையில்தான் பூம்புகாரும் குமரிக்கண்டமும் கடலால் விழுங்கப்பட்டுள்ளன. அறிஞர் பிளாட்டோ எழுதிய Timaeus and Critias என்னும் நூல் நிலநடுக்கங்களாலும் கடல்கோள்களாலும் அட்லாண்டிசு அழிந்ததைக் கூறும் இலக்கியச் சான்றாகும். அந்தக் காலக்கட்டத்தில் தான் குமரிக்கண்டம் மூழ்கியது.
பிளாட்டோவின் இலக்கியச் சான்றை ஏற்பார்கள். ஆனால் பைந்தமிழ்ப் பாவலர்களின் இலக்கியச் சான்றுகளை ஏற்க மறுப்பார்கள். எனவே கடலடியில் அகழ்வாய்வு முயற்சிகள் நடந்தாகவேண்டும். கடலடியில் மூழ்கிய கப்பல் களைத் தேடி வந்துள்ளது மாந்த இனம். கடலடியில் நாகரிகங்களைத் தேடும் குறிக்கோளுடன் விரைந்து செயல்பட்டாக வேண்டும்.
கிரகாம் அன்காக் அவர்களும் சென்னையில் உள்ள தேசியக் கடலியல் நிறுவனத்தின் நீரில் மூழ்கித் தேடும் வல்லுநர்களும் இணைந்து பூம்புகார் அருகே கடலுக்குள் தேடிய பொழுது ஆங்கில U எழுத்து வடிவிலான கட்டிடங்களை 23 மீட்டர் ஆழத்தில் கரையில் இருந்து 5 கி.மீ. தூரத்தில் கண்டுபிடித்தனர். இந்நகரம் 11,000 ஆண்டுக்கு முன்பு மூழ்கி இருத்தல் வேண்டும் என்ற முடிவுக்கு அன்காக் வருகிறார். இது தொடக்கம், தொடர வேண்டிய பணியின் தொடக்கம். குமரிக் கண்டம் இருந்ததாக இலக்கியங்கள் கூறும் இந்துமாக்கடலில் எந்த ஆய்வும் தொடங்கப்படவில்லை. தொடங்கினால் மூழ்கித் தேடினால் தமிழர்தம் பழம் புகழை ஞாலமறிய முடியும்!
எத்தனை நாளுக்குத்தான் சிந்துவெளி ஆய்வுகளை மட்டுமே பேசிக் கொண்டிருப்பது? புதிய ஆய்வுகளுக்கு உலகின் பல நாடுகளும் பல்கலைக் கழகங்களும் ஆர்வம் காட்டும். ஊக்கமளிக்கும், ஆயின் அவர்களுக்கு அழைப்பு விடுப்பதும் அரசின் பங்களிப்பை உறுதி செய்வதும் நிலையான புகழெய்திட முத்தமிழ் அறிஞர்களுக்குக் கிடைத்த நல்வாய்ப்பாகும்?
முதல்வர் இருக்கையில் உள்ளபோதே குமரிக்கண்டம் பற்றி முதல்வர் சிந்திப்பாரா?

No comments:

AIADMK spent Rs 641 crore in 2016 to bribe its way back to power Documents reveal that AIADMK spent Rs 641 cr in 2016 to bribe its ...